நாரணோ ஜெயராமன்: சத்திய தருணங்களைத் தேடி – எஸ். வைத்தீஸ்வரன்

 நாரணோ ஜெயராமன்: சத்திய தருணங்களைத் தேடி – எஸ். வைத்தீஸ்வரன்

பிறந்த கணம்தான் நம் வாழ்க்கையின் மிக சத்தியமான தருணமாக இருக்க வேண்டும். காலம் நகர நகர நம்மேல் தோல்மாதிரி பல அமானுஷ்யமான திரைகள் வளர்ந்து வளர்ந்து நம் சுயத்தை மறைத்துக்கொண்டே நம் வயதை வளர்த்துகின்றன அல்லது பௌதீகப்படுத்துகின்றன.

பிறகு புத்திசாலித்தனத்தையெல்லாம் சேகரித்துக்கொண்டு பல முன்னோடி சிந்தனைகளை நமக்குள் நிரப்பிக்கொண்டு மீண்டும் நாம் நம் சுயத்தைத் தோண்டியெடுக்க ஆர்வம் கொள்கிறோம். அந்த ஆர்வம் தீராத ஏக்கமாக, தொன்மையான தாகமாக, விசாரமாக, நெக்குருகித் தேம்பும் துக்கமாக, விரக்தியாக, தவமாக இப்படி பலவித அவஸ்தைகளை நாம் தீவிரமாக அனுபவிப்பதே நம் வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

இப்படி ஏன், ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு நாம் தள்ளப் படுகிறோம்? புறவாழ்க்கை திடீரென்று ஏன், காரணமில்லாமல் ஒவ்வாமை ஆகிவிடுகிறது? காலம் நம்மை ஏன் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவே ஒரு உணர்வு நமக்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது? பார்ப்பதெல்லாம் முடிவான சத்தியம் இல்லையென்பதும், சத்தியத்தைக் கண்டுணருவதுதான் நம் ஜீவித நோக்கம் என்பதும், நமக்குள் உந்துதல் நேருவதற்கு பல பிரத்யட்சக் காரணங்களும் நமக்குத் தோன்றுகின்றன. ஒரு வாகனத்தை ஒருவன் வாழ்க்கை முழுவதும் ஓயாமல் துடைத்துத் துடைத்து பிரித்து மாட்டிக்கொண்டே இருப்பதுதான் அவனுக்கு விதிக்கப்பட்ட காரியமா? அந்த வாகனத்தின் சிருஷ்டிப் பயனை, அழகான ஓட்டத்தை, மேடுகளிலும் பள்ளங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் கடக்கும் அதன் அற்புதமான, சுகமான பாய்ச்சலை என்றாவது அனுபவம் கொள்வானா?

மெய்ஞானம் என்பது ஒரு மாயமான்; வெறும் வார்த்தை: விரலை விரலால் பிடிக்கவே முடியாது என்று ஒரு கருத்தும் நம்மை பலராமயம் சமாதானப்படுத்துகிறது.

நாரணோ ஜெயராமன் அன்றாடம் மனக் காகிதத்தில் தனக்கு மட்டும் எழுதி வைத்துக்கொண்ட மனக்குறிப்புகள் போன்ற வீர்யமான சின்னச்சின்ன கவிதை வரிகள் என்னை மேற்கண்ட எண்ணப் பான்மைக்குத் தாண்டிவிட்டன.

நாரணோ ஜெயராமன், எழுபதுகளில் புதுக்கவிதையின் இளம்பிராயத்திலேயே இத்தகைய தனித்தன்மை வாய்ந்த குறுங்கவிதைகளை எழுதிக் கவனம்பெற்றவர். ‘கசடதபற’, ‘ஞானரதம்’ போன்ற சிறந்த சிறுபத்திரிகைகளில் பிரசுரம் கண்டவர்.

பிரெஞ்சுக் கவிஞன் ஆர்தர் ரைம்போ மாதிரி ஏழெட்டு வருடங்களுக்குள்ளாகவே தனக்குள் சொல்ல நினைத்ததை காத்திரமான சொற்களில் சொல்லிவிட்டு மௌனத்தில் அமைதியில் ஆழ்ந்துபோனவர்.

இவர் படைப்புகள் எல்லாமே, கவிதைகள் என்று பொதுவாக சொல்லப்படும் சில கவர்ச்சிகரமான அம்சங்களைத் தாண்டி சீரிய தனிமையில், நுண்மையாக செதுக்கப்பட்ட உள்ளோசைகள்.

அநேகமாக, எல்லா வரிகளுமே மிக எளிமையாக, ஆதங்கமாக, வேதாந்தமாக புறவாழ்க்கையின் அவசங்களால் தன்னியல்பாக எழும்பிய கேள்விகள்.

வாழ்வைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் அதன் மர்மங்களை புரிந்துகொள்ளத் தவிக்கும் ஏக்கங்களுடன் எழுப்பப்படும் கேள்விகள்… விசாரங்கள்… சமாதானங்கள்.

“வாழ்வை ஒரு பொறியில் கண்டு துன்புறுகிறேன், ஒன்றவும் முடியாமல் வேறாய் விலகவும் முடியாமல்…” என்கிறார்.

புற வாழ்க்கையின் அநிச்சயங்களால், ஆழமற்ற அலைக்கழிப்புகளால், அமைதி ஒரு கானல்நீராய் நம்மை அலைக்கழிக்கும் நிகழ்வுகளால், ஒரு மிக நுண்மையான கள்ளமற்ற மனம் தீர்வுக்காக அலையும் தீர்வற்ற போராட்டம்தான், இப்படிப்பட்ட வெளிப்பாடுகளைக் கவிதைகளாக இவருக்குச் சொல்லத் தூண்டுகின்றன. கிருஷ்ண பரமாத்மாவின் வேதங்கள், தத்துவஞானிகள் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, மார்ஸல் ப்ரௌஸ்ட், இமானுவேல் கான்ட் இவர்கள் யாருமே இவருக்கு விடையளிப்பதில்லை.

‘நான் நானாக இருத்தல் என்று ஒன்று உண்டா?’ என்று கேட்டுக் கொள்கிறார். கண்ணாடித் தரையில் விழுந்த பாம்பாக இவருடைய வாழ்க்கையின் வியர்த்தமான அசைவுகள் மீண்டும் மீண்டும் விடுதலையைக் கனவு காண்கின்றன. சுயவீரியத்துடன் சார்பில்லாமல் இவர் தேடும் வாழ்க்கையின் புதிர்களுக்கு அங்கங்கே அவ்வப்போது, மனித வாழ்க்கையை யோகமாக அமானுஷ்யமான அருளுக்குப் பாத்திரமாகும் யோக்யதையுடன், புனித விரதங்களுடன் அணுகவேண்டுமென்ற, இந்து மத ஆச்சாரியார்களின் போதனைகளும் இவருக்கு, சில புரிதல்களில் ஒரு கலங்கரை விளக்கமாகத் தெரிகிறது.

இவருடைய கேள்விகள் பிரபஞ்சபூர்வமானவை. நிரந்தரமானவை. எப்போதும் புதுமை குறையாததாக வாசிக்கும் சீரிய உள்ளத்தை எப்போதும் பல வினோதமான, விபரீதமான திசைகளில் சிந்திக்கத் தூண்டுபவை. தட்சிணாமூர்த்தியின் மௌனம்போல.

‘நான் எனப்படுகிற என்னையும் சேர்த்து எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டிப் பிரித்துப் பார்த்து விட்டேன்… என்னவோ இருக்கிறோம்… என்னவோ செய்கிறோம். எதுவும் சாத்தியமில்லை! மொத்தத்தில் ஒன்றுமில்லை போங்கோ!” என்கிறார்.

ஆனால் இந்தக் கவிதை ஆழமானது… அவ்வளவு எளிமையானதல்ல! உயிரோடு மனிதனை அறுவை சிகிச்சை செய்து திறந்து பார்த்து உயிர் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரும்மாண்டமான அபத்தத்தை (Colossal Absurdity) நுண்மையாகச் சுட்டிக் காட்டுகிறது.

எப்போதும் வாசிக்கக்கூடிய பிரபஞ்சக் கவிதைகளை எழுதியவர் நாரணோ ஜெயராமன்.

“எஸ். வைத்தீஸ்வரன்” <vydheesw@yahoo.com>

vaitheeswaran

 

Amrutha

Related post