அம்ஷன் குமாரின் ‘மனுசங்கடா’: யாருக்கான ஜனநாயகம் – தினகரன்ஜெய்

‘அரசு எந்திரம் என்பது அடக்குமுறைக் கருவியே. . ’ – லெனின்
தமிழ் திரைப்படத்துறையில் சமூகநீதி பேசுவதாகவும் சாதிக்கு எதிராக தன் படைப்பின் வழியே கலகக் குரலை உயர்த்துவதாகவும் கூறிக்கொண்டு, மேம்போக்கான ஒரு வெற்று பாவனையை உருவாக்கி, சினிமா வியாபாரம் செய்து வருகிற இயக்குனர்களுக்கு மத்தியில், எந்த வணிக நோக்கமும் இன்றி இந்திய சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற சாதிய உளவியலை ஓர் உண்மைச் சம்பவத்தின் வழியாக பேசியிருக்கிறார், இயக்குனர் அம்ஷன் குமார். ‘சாதி முறையானது மனிதர்களை தனித்தனி குழுக்களாக பிளவுபடுத்துகிறது. சாதி முறையை மதமே வலுப்படுத்துகிறது’ என்ற இந்திய சமூகம் பற்றி அம்பேத்கரின் பார்வையை இந்த திரைப்படம் ஆழமாக விவாதிக்கிறது.
‘இந்தியாவின் மனச்சாட்சி கிராமங்களில்தான் இருக்கின்றது’ என்று கூறிய காந்தியின் வார்த்தையை ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டு இந்த திரைப்படத்தை காணும்போது, ஒவ்வொரு தனிநபரின் தன்னிலை மற்றும் தன் மீது குவிக்கப்பட்ட அடையாளத்தை உணர்தலையும் தவிர்க்க இயலாது. அந்த உணர்தல் சாதியக் கட்டமைப்பு மீதும் மதம் அதனை பேணி காப்பது குறித்தும் நமக்குள் ஒரு தர்க்கத்தை நிகழ்த்தியபடியே இருக்கிறது. அந்த தர்க்கத்தினூடே அம்ஷன் குமார் பார்வையாளர்களோடு தொடர்புகொள்கிறார். ஒரு கதை சொல்லியாக, எவ்விடத்திலும் நீதியை கற்பிப்பதும் தத்துவ போதனையை பேசுவதுமாக பிரதியில் அவர் எங்கும் குறுக்கிடவில்லை. அம்ஷன் குமாரின் இந்தக் கலை நுணுக்கம் அலாதியானது. ஒரு சம்பவத்தை மூன்றாம் பார்வை வழியாக அப்படியே பிரதி எடுக்கின்ற Law and it’s Administration என்ற படமாக்கல் நிலையிலிருந்து பிரதியை எழுதி படத்தை உருவாக்கியிருக்கிறார். இது தான் அம்ஷன் குமார் என்ற படைப்பாளியின் திறன்மிக்க காட்சிக்கலை நுணுக்கத்திற்கான சான்று.
தென்னிந்தியாவில் மிகப் பரவலாக கவனம் பெற்ற ஆவணப்பட இயக்குனரான அம்ஷன் குமாரின் இந்த திரைப்படம் நாகப்பட்டிணத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இரட்டைக்குவளை நடைமுறை, பொதுப் பாதையை பயன்படுத்துவதில் தடை, செருப்பு அணிந்து நடப்பதற்கு அனுமதி மறுப்பு என்று சாதி பாகுபாட்டில் இந்திய கிராமங்களில் தீண்டாமை இன்றும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றது. ஒடுக்குமுறை, சுரண்டல், அதிகாரம் போன்றவை மீது ஒரு படைப்பாளி கவனம்கொள்ளும் விதமாகவே நாகப்பட்டிணத்தில் நடந்த இந்த சமூக முரணை படமாக்கி இருக்கிறார்.
‘மனுசங்கடா’ திரைப்படம் தீண்டாமையையும் சாதிய பாகுபாட்டின் விளைவாக மானுடத்தில் எழுகிற முரணையும் கோலப்பன் என்ற இளைஞனின் வழியாகவே காட்சிப்படுத்துகிறது. கதை என்று எதுவும் இல்லை. ஆனால், ஒரு சம்பவமே இங்கே அடுக்கடுக்காக விவரிக்கப்படுகிறது.
கோலப்பனின் தந்தை அகால மரணம் அடைகிறார். அதனை தொடர்ந்து அவரது சடலத்தை பொது பாதை வழியாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய கோலப்பன் முயலுகிறான். அதனை விரும்பாத சாதி இந்துக்கள் அத்துமீறலிலும் வன்முறையிலும் இறங்கி அதிகார பலம்கொண்டு சாதிக்கின்றனர். பொதுப் பாதை வழியாக தன் தந்தையின் சடலத்தைக் கொண்டு செல்ல மறுக்கும் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கல்வி அறிவு பெற்ற கோலப்பனோ நீதிமன்றத்தை நோக்கி ஓடுகிறான். சமநிலையை போதிக்கும் சட்டத்தின் துணையோடு நீதிமன்ற ஆணையை பெற்றும் வருகிறான். ஆனால், வருவாய்த் துறையும் காவல்துறையும் நீதிமன்ற ஆணையை ஏற்க மறுத்து சாதி இந்துக்களின் பக்கம் நின்று வேலை செய்கிறது. மேலும், காவல்துறையே கோலப்பனின் தந்தை சடலத்தை அத்துமீறி பிடுங்கி சென்று அடக்கமும் செய்கிறது. இறுதியில் தன் தந்தை எங்கே புதைக்கப்பட்டார் என்று கூட தெரியாமல் கையறு நிலையில் கோலப்பன் கதறி மண்ணில் புரண்டு அழுவதோடு படம் முடிகிறது.
இந்த திரைப்படம் பல அம்சங்களில் முக்கியமாக விளங்குவதோடு காட்சிப் படிமங்கள் மூலம் நேர்த்தி மிக்க படைப்பின் குணாம்சத்தையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக உருவாக்க முறை தொழில்நுட்பம் பாராட்டுக்குரியது. ஒளிப்பதிவாளர் பி.எஸ். தரண் தனித்து கவனம் பெறுகிறார். ஒரு ஆவணப்படமாக எடுக்க வேண்டிய இந்த சம்பவத்தை சுவாரசியமிக்க திரைப்படமாக அம்ஷன் குமார் காட்சிப்படுத்தியிருக்கிறார். மட்டுமல்லாது ஒரு ஆவணப்படத்தின் மூலமாக நாம் கண்டுணரும் உண்மையையும் அவை வலியுறுத்தும் அறத்தையும் ஒர் திரைப்படத்தின் வாயிலாக சாத்தியப்படுத்தி இருப்பது தான் இப்படத்தில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம். Meet in Person என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு தோற்றுவிக்கின்ற கேமரா கோணங்களை தேர்ந்தெடுத்திருப்பது வெகு சிறப்பு.
திரைக்கதை என்பது காட்சிகள், வசனங்கள் மற்றும் விவரிப்பின் மூலமாக ஒரு சுவாரசியமிக்க தன்மையை உருவாக்குவதுதான். அதனடிப்படையில் ஒரு காட்சியை உருவாக்குகிற போது ஒளிப்பதிவு அடிப்படையில் செய்யப்படுகிற Shot Division எதுவும் பிரிக்கப்படாமல் ஓர் மெய்ம்மை சார்ந்த அகத்தூண்டலை நிகழ்த்துகிற Realistically Formatல் ஒளிப்பதிவை அதாவது கேமராவை கையாண்டிருப்பது தான் ஒரு ஆவணப்படத்தின் தன்மையை இப்படத்திற்கு கொடுத்திருக்கிறது. பார்வையாளர்கள் அந்தக் கிராமத்தின் நிலவியல் கூறுகளை சுலபமாக உள்வாங்கிக் கொள்வதற்கும் இந்த கேமரா கோணங்கள் ஒரு வகையில் பயன்படுகிறது.
ஒலியை கையாண்டிருக்கிற விதமும் காட்சி கோணங்களும் ஒரு சிறுகதையை விலாவாரியாக நாம் வாசித்து அறிகிற உணர்வையும் தருகிறது. குறிப்பாக கோலப்பன் நகரத்திலிருந்து தன் கிராமத்திற்கு பேருந்தில் பயணம் செய்யும்போது பேருந்து ஜன்னல் வழியாக மிக உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களை வெறித்துப் பார்த்தபடி வரும் காட்சியும். . ஆளரவமற்ற நெடுஞ்சாலை பகுதியில் விளைநிலங்களை அழித்து வீட்டுமனைகளை விற்பனைக்கு உருவாக்கி வைத்திருப்பதும் மிக முக்கிய காட்சிப் படிமங்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபுறம் இந்த விஞ்ஞான யுகத்தில் வன்கொடுமைக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்படுவதும் மறுபுறம் உலகமயமாக்கலின் நாகரீக வளர்ச்சி என்று நம்பி கொண்டிருப்பதையும் இயக்குனர் ஒப்பீட்டளவில் இங்கே நிறுவி காட்டுகிறார். தன் தந்தையின் சடலத்தை பொதுப்பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்காக நீதிமன்றத்தில் பரிதாபமாக நின்று கொண்டிருக்கும் போது கோலப்பனின் அலைபேசியில், “வீட்டுமனையை சுலபத் தவணையில் தருகிறோம் வாங்கிக் கொள்கிறீர்களா” என்று ஒரு பெண் அலைபேசியில் அழைக்கிறார். கோலப்பன் மீது சூழ்ந்திருக்கும் அடக்குமுறையையும் எந்த ஒன்றில் மாற்றம் தேவையோ அந்த ஒன்றின் அகநிலை மற்றும் புறநிலையை சார்ந்து நிலவும் முரண்பாடுகளையும் இந்தக் காட்சியின் மூலமே இயக்குனர் அடையாளம் காட்டுகின்றார். இவ்வாறான பல காட்சிப் படிமங்களால் விளிம்புநிலை மக்களின் பரிதாப நிலையையும் ஆதிக்க வரம்புகளையும் அடையாளப்படுத்தி மதத்தின் நெறிப்படுத்துதலால் மட்டுமே சாதி அமைப்புகள் வலுவாக பாதுகாக்கப்படுகின்றன என்று புரிய வைக்கிறார்.
வெகுஜன சினிமா கலைஞர்களைக் கொண்டு ஒரு படைப்பை உருவாக்குவதற்கும் நடிப்பின் நுட்பங்களை புரிந்துகொண்ட நாடக கலைஞர்களை கொண்டு உருவாக்குவதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்பதை இப்படத்தில் நடித்த நடிகர்கள் நிரூபித்து இருக்கின்றனர். ஒரு படித்த இளைஞன் இந்த சாதி கட்டுமானங்கள் மீது கொண்டிருக்கிற வெறுப்பையும் கோபத்தையும் ராஜீவ் ஆனந்த் என்ற புதுமுக நடிகர் தன் உடல் மொழியால் வெளிக்கொண்டு வருகிறார். அதிகாரமும் அடக்குமுறையும் தன் மீது குவிந்து இருப்பதை எண்ணி கலங்கிய நிலையில் கைகட்டி அமர்ந்து இருக்கும்போது தன் தோழியிடம் அவர் பேசுகிற வசனம், மானுடத்தில் சாதி ஒருபோதும் சனநாயகத்தை அனுமதிப்பதில்லை என்ற சித்தாந்த தெளிவை கொடுக்கிறது.
நீதிமன்றமும் சட்டமும் யாருக்கானது? நீதிமன்ற ஆணையை ஒரு பொருட்டாகவே ஏற்றுக்கொள்ளாத அரசு எந்திரம் என்ற ஜனநாயக அமைப்பின் கடமைதான் என்ன? இடைநிலை சாதியினர் அரசு எந்திரத்தில் அங்கம் வகிக்கும் போது அவர்களின் அதிகார வரம்பை கொண்டு விளிம்புநிலை மக்களை நசுக்குவதற்கும் சுரண்டுவதற்கும் எவ்வாறு அவர்களுடைய ஆதிக்க மனோபாவம் வெகு யதார்த்தமாக இடம் கொடுக்கிறது என்பதை வருவாய்த்துறை அதிகாரி கதாபாத்திரம் உணர்த்துகிறது.

தனிமனித சுதந்திரத்தையும் உரிமையையும் அரசியலமைப்பு சட்டம் யாருக்கு கொடுத்திருக்கிறது? அது எந்த மனிதர்களுக்கானது? ஆதிக்கத்தையும் சுரண்டலையும் எதிர்க்கின்ற விளிம்புநிலை மக்களுக்கு இந்த சட்டம் வழங்குவது தான் என்ன? என்ற கேள்வி மூலம் இந்தத் திரைப்படம் அரசு அமைப்பை தோலுரித்து இருக்கிறது.
இதிகாச பாத்திரத்திற்கு 1000 கோடியில் வழிபாட்டு தலத்தை உருவாக்குகிற இந்த நவீன யுகத்தில் தான், சடலத்தை தூக்கிக்கொண்டு சக மனிதனுக்கு அஞ்சி இருள் அறைக்குள் பதுங்கி கொள்கிற அவலமும் நடக்கிறது.
அப்படியெனில், அரசு எந்திரம் யாருக்கானது? கோலப்பனின் கண்ணீர் வழியே எழும் கேள்வி மட்டுமல்ல, ஜனநாயக சக்தி மேல் நம்பிக்கை கொள்ளும் ஒட்டு மொத்த விளிம்புநிலை மக்களின் கேள்வியும் இதுதான். ‘தேசம் என்பதும் அரசு என்பதும் குடிமக்கள் ஒவ்வொருவருக்குமான பங்குரிமையைக் கொண்ட பொதுச்சொத்து எனில் கோலப்பனுடைய தந்தையின் சடலம் எங்கே?’ என்று ‘மனுசங்கடா’ திரைப்படம் கேள்வி எழுப்புகிறது.
தினகரன் ஜெய் <dinakaranjai20@gmail.com>