இமையத்தின் அரசியலும் இலக்கியமும் 1

சமகால அரசியலை உடைத்து எழுதும் துணிச்சல்
அசோகன் நாகமுத்து
தமிழில் சமகால தேர்தல் அரசியலை அச்சு அசலாக நவீன இலக்கியம் பதிவு செய்திருக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் எதிர்மறையானது. தேர்தல் அரசியல் மட்டுமல்ல; சமகால அரசியல் மீதே அதற்கு ஒரு நக்கலான பார்வை மட்டும் இருக்கிறது. முடிந்தவரை அதிலிருந்து தள்ளி நிற்கவே படைப்பாளிகள் விரும்புகிறார்கள். ஆனால், இமையம் இதிலிருந்து வேறுபடுகிறார். சமகால அரசியலை, குறிப்பாக கட்சிகளின் உட்கட்சி அரசியலை எதார்த்தத்தின் பின்னின்று காண்பிப்பதன் மூலம் அதன் மீதான கடும் விமர்சனத்தை அவர் முன்வைத்து வருகிறார்.
‘ஜூனியர் விகடன்’, ‘நக்கீரன்’ போன்ற பத்திரிகைகளில் அரசியல்வாதிகள் சொந்தக் கட்சிக்காரனையே எம்.எல்.ஏ. ஆகவிடாமல் எப்படி உள்ளடி வேலைகளைச் செய்கிறார்கள் என்று ஆண்டுக்கணக்கில் நாம் வாசித்து வந்திருக்கிறோம். இதன் பின்னால் சாதி, அதிகாரம், பதவி வெறி, உள்பகை என பல காரணங்கள் இருக்கின்றன. நானறிந்தவரையில் இந்த விஷயத்தைப் பேசும் ஒரே சிறுகதை இமையம் எழுதி இருக்கும் ’நம்பாளு’ தான்.
ஒரு கட்சியின் மாவட்ட செயலாளர், இரண்டு முறை அமைச்சர் ஆனவர், அம்மாவட்டத்தின் பெரும்பான்மை சாதிக்காரர், மாவட்டக் கட்சியில் அவர் சொன்னதுதான் சட்டம் என்று சக்திவாய்ந்த மனிதர். தம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த தன் விசுவாசிகளை (பல கட்சிகளும் அதில் அடக்கம்), ரகசியமாக கூட்டம் போட்டு சந்திக்கிறார். ஒரு திகில் கதையைப் போல் தொடங்கும் இச்சிறுகதை, அந்த குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் தன் கட்சிக்காரனையே தோற்கடித்துவிடுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்டுக்கொள்வதுடன் முடிகிறது. தேர்தல் சமயத்தில் எங்கள் சின்னத்துக்கே ஓட்டுப்போடுங்கள் என்று கேட்கும் வாய், இரவில் அவனைத் தோற்கடி என்கிறது.
“மாவட்டச் செயலாளரே இப்பிடி செஞ்சா கட்சி எப்பிடி ஆட்சிக்கு வரும்?” என்று கேட்டார் ஆசைத்தம்பி.
“வரும். நீ கொஞ்சம் பேசாம இரு. எந்த எடத்தில நின்னுக்கிட்டு என்னா பேசுற? தமிழ்நாடு முழுக்க மாவட்டச் செயலாளரா இருக்கவன், அமைச்சரா இருந்தவன் எல்லாம் மாவட்டத்தில வேற எவனும் தலய தூக்கக் கூடாதுன்னு இப்பிடித்தான் செய்றாங்க” என்று சொன்னார்.
“நம்ப கட்சியில மட்டும்தான் இப்படி செய்ய முடியும்.”
“எல்லாக் கட்சியிலியுந்தான் நடக்குது. நீ வாயக் கீய வெளிய வுடாத. கட்சியில கட்டம் கட்டிப்புடுவாரு.”
இவ்வாறு கூட்டத்துக்கு வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாகச் சொல்லி முடிகிறது சிறுகதை. அங்கங்கே நடக்கிற விஷயம்தான் என்றாலும் அது கதை சொல்லியின் விமர்சனமே அற்ற பார்வையாகப் பதிவாகிறது. ஆனால், இந்த பதிவே மிகப்பெரிய அழுத்தமான விமர்சனம் என்பதுதான் சூட்சுமம்.
‘கட்சிக்காரன்’ என்ற சிறுகதை எவ்வளவுதான் காலங்காலமாக கட்சிக்கு உழைத்தாலும் பணம் உள்ளவர்களுக்குத்தான் பதவிக்கு வரும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே எதார்த்தம் என்பதைச் சொல்கிறது.
பொன்னுசாமி கட்சிக்காரர். ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட சில கட்சிப் பதவிகளில் இருந்திருப்பவர். அவ்வளவுதான். தன் எழுபதாவது வயதில் இருக்கும் இவர் 21-வது வயதில் இருந்து கட்சியில் இருக்கிறார். ஊர்க்காரர்கள் மதித்தாலும் வீடு மதிப்பதில்லை; என்ன சம்பாதித்தே என்றுதான் கேட்கிறது.
‘இந்த முறைமட்டும் நீ சீட்டு வாங்கலன்னா கட்சிக்கரை போட்ட வேட்டியே கட்டக்கூடாது’ என மகனாலேயே மிரட்டப்படுகிறவர். மகனுக்கு வேறு கட்சியில் கவுன்சிலர் ஆக சீட்டு தருவதாகச் சொன்னபோது போகக்கூடாது என மறுத்தவர் பொன்னுசாமி. இப்போதும் கூட ஒன்றிய அல்லது மாவட்ட கவுன்சிலர் சீட்டுக்காக நேர்காணலுக்காக மாவட்ட செயலாளரைப் பார்க்க மகனுடன் வந்திருக்கிறார். ஒன்றியச் செயலாளர் தண்டபாணியிடம் போய் கேட்கிறார். அவரோ, “கட்சியின் நிலவரம் தெரியாதாண்ணே” என்று சொல்கிறார். அவரிடம் பதவிக்கு காசு கொடுப்பதாகச் சொல்லலாம் என்றாலும் ஆளைப்பிடிக்க முடிவதில்லை. கடைசியில் மாவட்டமும் பிடிகொடுக்காமல் சமாதானப்படுத்தி அனுப்புகிறார்.
“ஒவ்வொரு தேர்தல்லயும் நான் பணம் கட்டியிருக்கேன். ஒருமுறை கூட எனக்கு கட்சியில சீட் தரலீங்க.” ரொம்பவும் குரலைத் தாழ்த்திச் சொன்னார் பொன்னுசாமி. தங்கத்துக்கு என்ன தோன்றியதோ, “கொடுத்தா ஜெயிப்பீங்களா?’ என்று கேட்டார்.
“நான் கட்சிக்கு வந்து ஐம்பது வருசமாச்சு.”
“கட்சிக்காரன் முக்கியம். அதை விட ஜெயிக்கிறது முக்கியம்.” அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் தங்கம்.
கதையில் மாவட்டச் செயலாளராக வரும் தங்கம் என்கிற பாத்திரம் வாயிலாக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட கட்சிகள் சார்பாக சீட் கொடுக்கப்படும்போது தகுதியாகப் பார்க்கப்படுவது பணம் செலவு செய்யும் சக்தியைத்தான் என்ற எதார்த்தத்தை அழுத்தமாகச் சொல்கிறார் இமையம்.
இக்கதையை வாசிக்கும்போது இது எந்த கட்சியைச் சொல்கிறது, எந்த கட்சிமீது நுட்பமான கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல் கட்சியின் உள்கட்சி சமநிலைகளைப் பற்றி விவரிக்கும் கதை என்பதால் இது முக்கியமாகிறது.
‘பிழைப்பு’ என்பது இன்னொரு சிறுகதை. தலைப்பிலிருந்தே இதெல்லாம் ஒரு பிழைப்பா என இமையம் கேட்கிறார் என்று புரிந்துகொள்ளலாம். அன்றாட அரசியலில், அரசியல்வாதி ஒருவரின் அருகே அமர்ந்து, அவரது கோணத்தில் இருந்து கதை நகர்வதாக நாம் புரிந்துகொள்ளலாம். இதுவும் தேர்தல் நேர பரப்பில் செல்லும் கதை. இதில் இருப்பது உள்கட்சி அரசியலோ துரோகமோ இல்லை. அரசியல்வாதி எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் பட்டியலிடும் கதை.
வாக்கு சேகரிப்பதில் இருந்து, பாதியில், ஒரு சாவு வீட்டுக்குச் செல்வதற்காக அரசியல்வாதி அவசரமாகக் கிளம்புகிறார். ஆனால், வீட்டுக்கு வந்து தன்னை சந்திக்கக் காத்திருக்கும் மாவட்ட பத்திரிகை நிருபர்களைப் பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அவர்கள் கொஞ்சநேரம் மழுப்பிவிட்டு விஷயத்துக்கு வருகிறார்கள். தேர்தலை முன்னிட்டு அவரவர் பத்திரிகையில் செய்தி வெளியிட பேக்கேஜ் பேசுகிறார்கள். தினமும் ஒரு லட்சம். தலைமை அலுவலக உத்தரவு. எக்கச்சக்கமாக செலவாகுமே என்று அரசியல்வாதி தயங்கினாலும் மறுக்க முடியாமல் தவிக்கும்போது நமக்கே அவர் மீது இரக்கம் சுரக்கிறது.
“1991-ல் தங்கம் முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது மொத்தமே பதினாறு லட்சம்தான் செலவாயிற்று. இப்போது பத்திரிகைக்காரர்களுக்கு மட்டுமே இருபது, முப்பது லட்சம் செலவு ஆகும்போல் இருக்கே என்று யோசித்தார். 1991-ல் தங்கத்திற்குத் தெரிந்து இரண்டு மூன்று பத்திரிகைக்காரர்கள்தான் மாவட்டத்திற்கே இருந்தார்கள். கட்சிக் கூட்டத்திற்கு வந்த பத்திரிகைகாரர்களிடம் டீ செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று நூறு ரூபாய்தான் அப்போது கொடுத்தார். அதையே வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இப்போது அப்படிச் சொல்கிற ஒரு ஆளைப் பார்ப்பது அபூர்வம். இப்போது பத்திரிகை நிருபர்கள் என்று மாவட்டத்தில் குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள். தொலைக்காட்சி நிருபர்கள் என்று தனியாக நூறு பேர் இருப்பார்கள். ’இவனுங்ககிட்ட கொடுக்கிற பணத்த சனங்ககிட்ட கொடுத்தா கொறஞ்சது பத்தாயிரம் ஓட்டு வாங்கி ஜெயிக்கலாமே’ என்று மனதிற்குள் கணக்குப்போட்டார். கணக்கு அவரை பயம்கொள்ள வைத்தது.’
இதுதான் ஒவ்வொரு அரசியல்வாதியும் மாவட்டங்கள்தோறும் எதிர்கொள்ளும் அசல் களநிலவரம். அரசியல் வட்டாரத்துக்கு மட்டுமே தெரிந்திருக்கும் இந்த விஷயம், இந்த கதை மூலமாக இலக்கிய உலகிலும் இடம் பிடித்துக்கொள்கிறது.
‘வாழ்க வாழ்க’ – இது இமையத்தின் குறுநாவல். தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் பெண்களின் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது. காசு கொடுத்து கூட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வெங்கடேச பெருமாள் போன்ற பாத்திரங்கள் அன்றாடம் நாம் கடந்து செல்பவைதான். கடுமையான கூட்டத்தின் நடுவே மாட்டித் தவிக்கும் கிராம பெண்களின் சிரமங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் எழுத்தாளர்.
வெயிலில் உட்கார நாற்காலிக்கு பெண்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். “ஊரான் ஊட்டு நாற்காலியில் செத்த நேரம் உட்காருவதற்கு ஜனங்க எம்மா அடிச்சுகிடுது? எம்எல்ஏ-வா அமைச்சரா இருக்கின்றவன் ஏன் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சுக்க மாட்டான்?’’ என்கிறாள் ஒரு பெண்.
ஊர் விட்டு ஊர் வந்து அரசியல் கூட்டம் கேட்க வந்திருந்தாலும் சாதி அங்கும் துரத்துகிறது. “நானும் உங்க ஊரு தான்’’ என்கிற பெண்ணை, “நீ ஊரு இல்ல பறத்தெரு” என்று துரத்தி அடிக்கிறார்கள்.
பெண்களின் வார்த்தையில் அரசியல்வாதிகளின் அத்தனை வேடங்களும் அனாயாசமாக தெறிக்கின்றன. இமையம் எதையும் பூசி மெழுகாமல் அப்படியே எழுதி இருக்கிறார் என்பதுதான் இங்கு முக்கியம். பிரியாணிக்குப் பதிலாக குஸ்காவை மட்டும் தந்து ஏமாற்றும் அரசியல்வாதிகளும் தலைவி வரவேண்டும் என்பதற்காக வெயிலில் காய்ந்து மயங்கி விழும் பெண்களுமாக, ஒரு பொதுக்கூட்ட சூழலில் நாமும் அமர்ந்திருக்கும் உணர்வை எளிதாக உருவாக்கி திகைக்க வைக்கிறார் இமையம்.
சமகால அரசியலில் அரசியலை அப்பட்டமாக உரித்து முன்வைக்கும் இந்த குறுநாவல் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்லும் நம் சமூகத்தில் விழுமியங்களையும் ஒரு நக்கலான பார்வையில் சொல்லிக் கொண்டே செல்கிறது.
அரசியல் கூட்டத்துக்கு ஆட்களைக் காசு கொடுத்துத் திரட்டிச் செல்லவேண்டும் என்பதை போன தலைமுறை ஆட்கள் கேட்டால் திடுக்கிட்டுத்தான் போவார்கள். ஒரு தலைமுறை அரசியலுக்கு ஆட்கள் திரண்டனர். இன்றைய தலைமுறை அரசியலுக்கு ஆட்கள் திரட்டப்படுகின்றனர். இதுதான் வித்தியாசம்.
‘கட்சிக்காரப் பிணம்’ என்கிற இமையத்தின் இன்னொரு சிறுகதையும் மேற்சொன்ன விஷயத்தின் தொடர்ச்சியே. கட்சியில் நீண்டகாலமாக ஒன்றிய அளவில் பொறுப்புகள் வகித்த மூத்த கட்சிக்காரரான பாண்டியன் இறந்துவிடுகிறார். எந்தவித சாதி சடங்குகள், மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடாத அவரது உடலை கட்சிமுறைப்படி அனுப்புவதா, சாதி வழக்கப்படி அனுப்புவதா என்ற விவாதத்தில் கட்சியின் பிடி தளர்ந்து சாதி வழக்கமே ஜெயிக்கிறது.
“இத்தினி வருசத்தில கட்சி மாறி போனவரில்ல. தலைவர ஒரு வாத்த கொற சொன்னவரில்ல. தலைவரு எழுதுற கடிதத்த படிக்கலன்னா மனுசனுக்கு சோறு எறங்காது. அவரு போவாத ஜெயிலு இல்ல. போராட்டம் இல்ல. ஒரு கூட்டத்த, மாநாட்ட விட்டவிரில்ல. அவரு மாதிரியான ஒரு கட்சிக்காரன இனிமே பாக்குறது கஷ்டம்தான்.”
“தலைமையிலிருந்து யாரும் வருவாங்களா?”
“பழய கட்சியா இருந்தா சொல்லலாம். இப்ப அப்பிடி சொல்ல முடியாது. இப்பதான் கட்சி வேற மாதிரி இருக்கே. எல்லாத்துக்கும் மேல, கரண்ட்டுல எம்.எல்.ஏ., எம்.பி. அமைச்சர்ன்னாதான் வருவாங்க. எம்.எல்.ஏ.வும் மாவட்டமும் வரதா சொல்லிக்கிட்டாங்க. அதுவும் உறுதியா தெரியல. இரங்கல் கூட்டம் போடுறம்ன்னு சொன்னாங்க. எத்தன மணிக்குன்னு தெரியல. அதுவும் நடக்குமா, நடக்காதான்னு தெரியல.”
கட்சிக்காரனின் பார்வையில் இது கடுமையான விமர்சனம்தான். சிறுகதையின் இறுதியில் “ஒங்க காலம் முடிஞ்சி போச்சாங்க?” என்று கேட்டுவிட்டு அழ ஆரம்பிக்கிறாள் இறந்தவரின் மனைவி. இந்த வரியில் அடங்கி இருக்கிறது கட்சி அரசியலின் தற்கால நிலவரம்.
இந்த கதைகளில் இருக்கும் பொதுத்தன்மை உள்ளதை உள்ளபடியே, யாராவது கோபித்துக்கொள்வார்களோ என்று மறைக்காமல் எழுதி இருப்பதுதான். அத்துடன் சமகால அரசியலின் இருட்டான பக்கங்களின் மீது துணிச்சலுடன் வெளிச்சம் பாய்ச்சுவதும் கூடத்தான். இந்த நான்கு கதைகளில் இமையம் எழுதி இருக்கும் விஷயங்களையும் இயல்பான நடப்புக்களையும் எழுத வேறு யாரும் துணியமாட்டார்கள் என்பதுவே தமிழகச் சூழல். இந்த துணிச்சல் இமையத்துக்கு இருக்கிறது.
எந்த இடத்திலும் தன் குரலாக எதையும் ஒலிக்கச் செய்யாமல் பாத்திரங்களை இயல்பாகப் பேசவிட்டே எழுதும் பாணி இவருடையது. ஆனால், அந்த பாத்திரங்கள் வெள்ளந்தியாக நினைத்ததை நினைத்த போக்கில் பேசக்கூடியவை. அவை பேசுகின்றன. சமகால தேர்தல் அரசியலின் அத்தனை அழுக்குகளும் நம் முன்னே திரள்கின்றன. இதன் மூலம் கரைவேட்டிய கட்டிய ஓர் எழுத்தாளன், தன்னையே விமர்சனம் செய்துகொள்கிறான் என்றுகூட சொல்லிவிட முடியும்!
அசோகன் நாகமுத்து <tamilasokan@gmail.com>