காதை பிளக்கும் அபாய சத்தம் | பிரபு திலக்

 காதை பிளக்கும் அபாய சத்தம் | பிரபு திலக்

மீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) நடத்திய ஆய்வுகளின் படி இந்தியாவிலே அதிகம் ஒலி மாசு சென்னையில்தான் பதிவாகியுள்ளது. இது நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. சென்னையின் நெருக்கமான கட்டிடங்கள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகளின் அகலம் குறைந்துள்ளது, மக்களின் அன்றாட வாழும் முறைகள் போன்றவற்றால் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே ஒலி மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. என்றாலும், சென்னையில் மட்டுமல்லாமல் மற்ற நகரங்களிலும் பல பகுதிகளில் கிராமங்களிலும்கூட இது இன்று ஒரு முக்கிய பிரச்சினை.

பொதுவாக, ஒலியின் தீவிரம் டெசிபல்களில் (dB) அளவிடப்படுகிறது. மனிதக் காது கேட்கக்கூடிய மிக மெல்லிய ஒலி 1 Db ஆகும், அதே போல் மனிதன் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50 முதல் 55 டெசிபல்களை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 85 டெசிபலுக்கு மேல் சென்றால் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுகளாக கருதப்படுகிறது.

இதுபோல், நம் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஒலி மாசுவுக்கு தர அளவினை நிர்ணயித்துள்ளது. அதன்படி குடியிருப்புப் பகுதிகளில் பகலில் 55 டெசிபிலும் இரவில் 45 டெசிபிலும், மார்க்கெட் போன்ற கமர்ஷியல் பகுதிகளில் பகலில் 65 டெசிபிலும் இரவில் 55 டெசிபலும், தொழிற்சாலை பகுதிகளில் பகலில் 75 டெசிபிலும் இரவில் 65 டெசிபிலும் இருக்கலாம் என்றும் நிர்ணயித்துள்ளது. ஆனால், சென்னையில் இந்த இடங்களில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான சத்தமே உள்ளது என்கிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் ஒலி மாசு அளவீடு செய்தபோது அதன் அளவீடு 60 டெசிபில்தான் இருந்தது. அதுவே 2000ஆம் ஆண்டு 75 டெசிபிலாகவும் இப்போது 85 டெசிபிலாகவும் உயர்ந்துள்ளது. காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் மாலை 6 மணி முதல் எட்டு மணி வரையிலும் 85 டெசிபில் அளவு ஒலி மாசு என்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு தொழிற்சாலையின் ஒலி மாசுவிற்கு நிகரான அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

காதுகளில் துல்லியமான சின்ன ஒலிகளை கேட்பதற்கு இன்னர் ஹேர் செல்ஸ், 100 டெசிபெலுக்கு மேற்பட்ட அதிக சத்தத்தை கேட்பதற்கு அவுட்டோர் ஹேர் செல்ஸ் என்று இரண்டு வகையான ஹேர் செல்ஸ்கள் இருக்கிறது. அதிக ஒலிகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் இவைகள் பாதிக்கப்பட்டாலும், எதிர்பாராத நேரத்தில் திடீரென தாக்கும் ஒலி மாசினாலும் கேட்கும் திறனை உடனே இழக்க நேரிடலாம். குறிப்பாக, 65-70 டெசிபல் சத்தத்தை சில மணி நேரம் தொடர்ந்து கேட்டு வந்தால் அது நமக்கு எரிச்சலூட்டும் இரைச்சலாக மாறி விடுகிறது. இதுவே 85 டெசிபல் சத்தத்தை இரண்டு மணி நேரத்திற்கும், 100 டெசிபல் சத்தத்தை 15 நிமிடங்களும், 120 டெசிபல் சத்தத்தை 2 நிமிடங்களும் கேட்டல் அது நம் காதுகளின் கேட்கும் திறனைப் பாதிக்கும்.

ஒலி மாசினால் பாதிக்கப்படும் குழந்தைகள் சரியாக செய்யக்கூடிய ஒரு செயலை தவறாக செய்ய ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

85 டெசிபில் ஒலி மாசில் வருடம் முழுவதும் வேலை பார்ப்பவர்களுக்கு காது கேளாமை ஏற்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது.

சாலைகளில் அதி அவசரமாக செல்லும் வாகனங்கள் எழுப்பும் ஒலியால் நமது உடம்பில் உடனடியாக இரத்த அழுத்தம் கூடி இதயத்தை பாதிக்கச் செய்யும். இரைச்சல் சத்தத்தை நம் காதுகள் கேட்கும் பொழுது அதிக அழுத்தம், இரத்த அழுத்தம், செவி கேளாமை, தூக்கமின்மை, சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, சென்னையில் கட்டுமானப் பணிகள், போக்குவரத்து, ஒலிபெருக்கி பயன்பாடு போன்றவற்றால் மக்களின் தூக்கமின்மையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளி விவரங்கள்.

அதிக ஒலி மாசிற்கு உள்ளாகுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.

எனவே, வெறும் சத்தம் என்ன செய்துவிடும் என அலட்சியமாக இருக்காமல் ஒலி மாசை குறைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தொழிற்சாலை இயந்திரங்கள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டிட பணிகள், மின் விசைகள், ஒளிபரப்புக் கருவிகள், ஒலிபெருக்கி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்குச் சாதனங்கள் என இரைச்சல் உண்டாவதற்கு பல காரணிகளாக இருந்தாலும், சென்னை நகரத்தின் 60-70% இரைச்சலுக்குக் காரணமாக இருப்பது வாகனப் போக்குவரத்து தான். ஆம், சென்னையின் வாகனங்கள் தான் இந்நகரின் ஒலி மாசிற்கான முக்கியக் காரணம்,

வெளிநாடுகளில் பின்னால் வரும் வாகன ஓட்டி ஹாரன் அடித்தால் முன்னால் செல்லும் வாகன ஓட்டி தவறு செய்வதாக அர்த்தம். ஆனால், சென்னையில் முன்னால் செல்பவர் தவறே செய்யாமல் இருக்கும்போதும் பின்னால் வருபவர்கள் வீணாக ஹாரன் அடித்து டென்ஷனை ஏற்றுகிறார்கள்; தனக்கும் ஏற்றிக்கொள்கிறார்கள்.

சிக்னலில் சிவப்பு விளக்கு எறிவது நின்று செல்வதற்காகத்தான். ஆனால், சிக்னல்களில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும்போதும் ஹாரன்களை விடாமலும் விட்டுவிட்டு ஒலிப்பவர்கள் இருக்கிறார்கள். நம்மில் பலரிடமும் தெரியாமலேயே ஒட்டிக்கொண்ட மோசமான பழக்கம் இது. இது மாற வேண்டும். அவசியமாக இருந்தால் மட்டுமே ஹாரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளின் அதிக ஒலியால் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே சிலர் மரணமடைந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளும் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளன. எனவே கோயில்கள், திருத்தல வழிபாடுகளின்போதும், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் மற்றவருக்கு இடையூறு செய்யாதவண்ணம் ஒலி அளவை குறைத்து வைக்கலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அதிக ஒலி எழுப்புவது அபராதத்திற்குரிய தண்டனையாக கருதப்படுகிறது. இதனை அரசு தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, அமைதியான இடமாகக் கருதப்படும் பள்ளி கல்லூரிகளைச் சுற்றி 100 மீ தொலைவில் எந்த வணிக வளாகமும் தொழிற்சாலையும் இருத்தல் கூடாது, ஆனால், நகரின் பல இடங்களில் இது சரியாக கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.

ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000, எந்த ஒலி-உமிழும் கருவியும் பரிந்துரைக்கப்பட்ட வரம்பைத் தாண்டி இரவில் செயல்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இன்று வரை பல கட்டுமானப் பணிகள் இரவில்தான் நடக்கின்றன. மேலும், நாள் முழுவதும் அமைதியான பகுதிகளிலும், இரவு 10 மணிக்குப் பிறகு குடியிருப்பு பகுதிகளிலும் சத்தம் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறல்களுக்கு 1,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்க CPCB பரிந்துரைக்கிறது. ஆனால், அதிக சத்தம் வருவதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கான அலைவரிசை மற்றும் உபகரணங்கள் நம் காவல்துறையிடமே இல்லை என்பது எவ்வளவு அவலமானது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது என்பதையே, அண்மைக் காலமாக ஒலி மாசு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது காட்டுகிறது.

எச்சரிக்கையாக இருப்போம்.

Prabhu Thilak

Amrutha

Related post