பூவை நிலை – இந்திரா பார்த்தசாரதி
உங்கள் உடல் உங்களுடையதில்லை, அதன் உரிமையாளர் யார் தெரியுமா?
அரசாங்கம்.
பக்தர்கள் கண்ணீர் மல்க, பக்தி நனிச் சொட்ட சொட்ட, ‘என் உடல், ஆவி அனைத்தும் உனதே’ என்று இறைவனிடம் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இப்பொழுது பாரதத் திருநாட்டின் குடிமக்கள், தம் சரீரங்கள் இறைவனுக்குச் சொந்தம் என்று சொல்லுகிறார்களோ இல்லையோ, அவை அரசாங்கத்துக்குச் சொந்தம் என்பதை உணர வேண்டும்.
இது பாரத அரசாங்கத்து வழக்குரைஞரின் திருவாக்கு. உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒரு வாதத்தை அவர் சமர்ப்பித்திருக்கிறார். இதனால், தன் உடைமையான குடிமகளுடைய / மகனுடைய உடலை, ஆதார் அடையாளச் சீட்டு சம்பந்தமாக எந்த விதமான பரிசோதனைக்கும் உட்படுத்த அரசாங்கத்துக்கு உரிமை இருக்கிறது என்கிறார் அவர். இதே உரிமைதான் ஒருத்தி / ஒருவன் தற்கொலை செய்துகொள்ள முயன்றால், அவளை / அவனைத் தண்டிக்கவும் செய்கிறது என்பது அவர் வாதம்.
ஆள்கின்றவனை இறைவனாகக் காணும் மரபும் நம் நாட்டில் அந்த நாளில் இருந்திருக்கிறது. அரசனுடைய ‘விஷ்ணு’ அம்சத்தைப் பற்றி, தைத்திரீய பிராமணம் கூறியிருக்கிறது. இதை, ‘பூவை நிலை’ என்கிறார் தொல்காப்பியர். ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்கிறார் நம்மாழ்வார். மத்திய நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலும் அரசனை இறைவனோடு சம்பந்தப்படுத்தி, அரசனுக்குரிய தெய்வீக உரிமைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
ஆகவே, நமக்குத் தற்கொலை செய்துகொள்ள உரிமை கிடையாது. ஆனால், அரசாங்கம் என்ற இறைவன் / போலீஸ் எத்தனை ‘என்கௌண்டர் கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம். ஆகவே, பாரதக் குடிமக்களுடைய உடல்கள், இன்றைய நம் இறைவனாகிய மோடிக்கு உரியன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்திரா பார்த்தசாரதி <parthasarathyindira@gmail.com>