மனம்விட்டு பேசுங்கள்; தற்கொலை எண்ணம் தாண்டி போகும் – பிரபு திலக்

 மனம்விட்டு பேசுங்கள்; தற்கொலை எண்ணம் தாண்டி போகும் – பிரபு திலக்

மிழ்நாடு முழுவதும் கடந்த கல்வியாண்டில் நடந்த 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகின. அன்று ஒரே நாளில் பொதுத்தேர்வு தோல்வி எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மேலும், 28 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் சரி, அதற்கு முந்தைய சமீப நாட்களிலும் சரி, பள்ளி மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்துள்ளது. தினமும் செய்திதாள் படிப்பவர்களுக்கு, தொலைக்காட்சி செய்தி பார்ப்பவர்களுக்கு தற்கொலை என்பது புதிய செய்தியாக இருக்காதுதான். ஆனால், கல்வி பயிலும் மாணவ – மாணவிகளின் தற்கொலை பற்றிய செய்திகளும் தினசரி வர ஆரம்பித்துள்ளதான் சமீப கால அதிர்ச்சியின் உச்சம்!

அரியலூர் அனிதா தொடங்கி, செஞ்சி பெரவள்ளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, விழுப்புரம் மோனிஷா, கோவை சுபஸ்ரீ, பட்டுக்கோட்டை ஹரிஷ்மா, அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதி துர்கா, பொள்ளாச்சி கீர்த்திவாசன், வேலூர் செளந்தர்யா, சேலம் ஆத்தூர் சுபாஷ் சந்திரபோஸ் என நீண்டு கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே எத்தனை மாணவ மணிகளை இழந்துவிட்டோம்.

நீட் தேர்வு, பாலியல் தொல்லை, தேர்வில் தோல்வி என காரணங்கள் மாறியிருக்கிறது, மரணங்கள் தொடர்கிறது. தேர்வில் தோல்வியா தற்கொலை… காதல் தோல்வியா தற்கொலை… கேட்டது கிடைக்கவில்லையா தற்கொலை… மொபைலில் விளையாட விடவில்லையா தற்கொலை… நான் அழகாக இல்லை என்று ஒரு 12ஆம் வகுப்பு மாணவன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளான்… காதலன் ஐஸ்கீரிம் வாங்கித் தரவில்லை என்று ஒரு தற்கொலை…

ஒரு உயிர் உருவாவது என்பது எவ்வளவு பெரிய போற்றுதலுக்கு உரிய செயல்; அதனால்தான், பிள்ளைப்பேறு பெற்றோர்களுக்கு கிடைத்த வரமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்த ஒரு அற்புதமான உயிரை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக்கொள்வது எவ்வளவு வேதனை?

தற்கொலை தொடர்பாக வெளியாகும் சமீப ஆய்வுகள், அதில் காணப்படும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிப்பவை. மூன்று பேரில் ஒருவர், வாழ்வின் ஏதாவது ஒருகட்டத்தில் தற்கொலையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள். மனக் கசப்புகளை தனிமையில் எண்ணி பார்க்கையில் தற்கொலையே தீர்வு என சிலர் நினைப்பதால், கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அதிலும் 15 முதல் 45 வயதுடையவர்கள் 90 சதவீதம் என்பதும், அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் என்பதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

உலகளவில் அதிகரிக்கும் இளம் பருவத்தினர் தற்கொலைகளில் இந்தியாவுக்கே முதலிடம். இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது, தமிழ்நாடு!

இப்போதெல்லாம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்கள் நெருங்கும்போது, இந்த வருடம் எத்தனை மாணவர்கள் தற்கொலைகள் செய்துகொள்வார்களோ என பலரது மனமும் பதைபதைக்கத் தொடங்கிவிடுகிறது. வெற்றியை கொண்டாடும் மனமகிழ்ச்சி இருக்கும் நிலையில், தோல்வியை தாங்கும் மனவலிமை இல்லாமல் போய்விட்டது.

நம் மாணவ மணிகளிடையே இடையூறுகளை எதிர்கொள்ளும் திறன் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்பதையே இது காட்டுகிறது. இடையூறுகள் யாருக்குத்தான் இல்லை? பிரச்சினைகள் நிறைந்ததுதான் வாழ்க்கை… பிரச்சினைகள் இல்லாமல் வாழ்பவர்கள் என்று இந்த உலகில் யாரும் கிடையாது. அமெரிக்க அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் பிரச்சினை இல்லையா?

 

ற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தங்கள் மனநிலையை மிக நெருங்கிய ஒருவரிடம் பகிர்ந்துகொண்டால்கூட அது எவ்வளவு முட்டாள்தனமான முடிவு என்பதை உணர்ந்துகொள்வார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் யாருடனும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்வதில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. அப்படிப் பேசினால், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பகிர்ந்தால், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் வருந்துவார்கள் என்று அவர்கள் தவறாகக் கருதுகிறார்கள். அது உண்மையில்லை. தங்கள் எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் போதுதான் ஒருவருக்குச் சுதந்தர உணர்வு கிடைக்கும், அவர்கள் தூய்மையாக உணர்வார்கள்.

எல்லா உணர்ச்சிகளையும் போல பயம், கவலை, வேதனை, விரக்தி போன்றவையும் கொஞ்ச நேரத்தில் குறைய வேண்டிய விஷயங்கள்தான். தன்னைத்தானே சேதப்படுத்திக் கொள்ள வேண்டும், தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறவர்கள் அந்த எண்ணத்தை யாரிடமாவது பகிர்ந்துக்கொள்ளும்போது, அதன்பின்னர் தங்கள் முடிவை மாற்றிகொள்வார்கள்.

உங்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறதா, நீங்கள் நம்புகிறவர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அப்பா – அம்மாவுடன் பேச முடியாத விஷயமா, யாராவது ஒரு பெரியவர் அல்லது நண்பர்கள் / தோழிகளுடன் மனதை விட்டு பேசுங்கள்.

 

மீபத்தில் தற்கொலை செய்துகொண்ட கரூர் பிளஸ் 2 மாணவி, “பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும்” என உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அவர் வேண்டுகொள் படி இனியொரு தற்கொலை நிகழாமல் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள், உறவினர்கள் பங்களிப்பும் அவசியம்.

ஒரு மனிதன் / மனுஷியின் வாழ்க்கையில், அவர்கள் குழந்தையாகவும் இல்லாத, வயது வந்தவர்களாகவும் இல்லாத ஒரு பருவம் ‘டீன் ஏஜ்’. தமிழில் விடலைப் பருவம், வளரும் இளமைப் பருவம், பதின் பருவம் என்று பலவாறாக குறிப்பிடுகிறோம். பத்திலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்களை இப்பருவத்தினராக உலக சுதாதார மையம் வரையறுத்துள்ளது.

‘டீன்ஏஜ்’… வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் ஒரு காலகட்டம். அத்துடன் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமும்கூட. அதுவரை அவர்களுடன் சமூகம் கொண்டிருந்த உறவிலும் சமூகத்துடன் அவர்கள் கொண்டிருந்த உறவிலும் மாற்றங்கள் தோன்ற தொடங்கும் காலம்.

குறிப்பாக இந்த வயதில் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு அவர்கள் குழப்பமடைவார்கள், மிகவும் கூச்சப்படுவார்கள், சிறிது தயக்கமும் அடைகிறார்கள். இதனால், வளரும் இளமைப் பருவத்தினர் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும்.

தொடக்கத்தில் இது தொடர்பான சரியான புரிதலோ, தெளிவோ இல்லாத குழந்தைகள் பயப்படுகின்றனர் அல்லது குழப்பமடைகின்றனர். இது எல்லாம் தொடர்பாக அவர்கள் முன் பல கேள்விகள் உள்ளன. எனவே, இக்காலகட்டத்தில் சரியான வழிகாட்டுதல் அவர்களுக்கு கட்டாயம் தேவை.

பாலியல் உட்பட எதைப் பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விஷேச வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. வழிகாட்டி இல்லாத குழந்தைகள் தனித்து விடப்படுகிறார்கள். அல்லது தவறான வழிகாட்டிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இதனால், விடலைப் பருவத்தில் குறிப்பாக 15 வயதில் சிறுவர்களை விடவும் சிறுமிகளே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

எனவே, பருவ வயதில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக குழந்தைகளுடன் மனத்தடையின்றி பேச பெற்றோர்கள் முன்வரவேண்டும். சில பெற்றோர்கள் கூச்சம் அடைவது தேவையற்றது. நாமும் சிறு வயதையும் இக்குழப்பங்களையும் கடந்து வந்தவர்கள்தான் என்ற எண்ணம் இருந்தால் அந்த கூச்சத்தை தவிர்த்துவிட முடியும்.

உடல் அளவிலும் சமூக அளவிலும் மன ரீதியாகவும் சரியாக இருக்கும் குழந்தைகளைத்தான் நலமான குழந்தைகள் என்று உலக சுகாதார மையம் சொல்கிறது.

‘டீன் ஏஜ்’ பருவத்தினர் பிரச்சினைகளும் குழப்பங்களும் தீர்க்கப்படாத போது, கவலைகள் அதிகரித்துக்கொண்டே வந்து படிப்பில் நாட்டம் குறையும். இதுவும் மனச்சோர்வை ஏற்படுத்தும். இவர்கள் தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்கத் தொடங்குவார்கள். மனச்சோர்வு காரணமாக பசியின்மை, எடை குறைவது, சோர்வடைதல், முடிகொட்டுதல் போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கடைசியாக இது மனஅழுத்தத்தில் கொண்டு போய் சேர்க்கும்.

 

ற்கொலைகள் ஏதோ தற்செயலாக நிகழ்வதில்லை என்று கூறும் ஆய்வு முடிவுகள், தற்கொலை செய்துகொள்ளும் பதின்பருவத்தினரில் 90 சதவீதத்தினர், மனநல பிரச்சனை ஏதோ இருப்பதால்தான் அதைச் செய்கிறார்கள் என்றும் கூறுகின்றன.

ஒருவர் ஊக்கமற்று இருப்பதாக அல்லது சோர்வுற்று இருப்பதாக சில நேரங்களில் உணர்வது பொதுவாக உள்ள விஷயம்தான். ஆனால், இந்த உணர்வு அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்களாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம் அபூர்வமான பிரச்சினையும் அல்ல, தீர்க்க முடியாத நோயும் அல்ல. உலகில் ஐந்து பேரில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆபிரஹாம் லிங்கனும்கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.

சாதாரண ஜலதோஷப் பிரச்சினை போன்றதுதான் மன அழுத்தமும். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களில் 90 சதவீதத்தினர் மருத்துவர்கள் பரிந்துரைத்த சரியான மருந்துகளின் உதவியுடன் முழுவதுமாக குணமடைந்து விடலாம். கண்டுகொள்ளாமல் விடப்படும் போதுதான் அது தற்கொலை உட்பட பல்வேறு பின்விளைவுகளுக்கு காரணமாகிவிடுகிறது.

மன அழுத்தம் உண்டாவதுக்கு காரணமாக, குறிப்பிட்ட எதாவது ஒரு காரணியை மட்டும் சொல்லிவிட முடியாது. அது உட்புற, வெளிப்புற காரணிகளின் கூட்டு விளைவால் ஏற்படுகிறது. மனஅழுத்தத்தை உண்டாக்குவதில் பாரம்பரியம், உளவியல், சமூகக் காரணிகள் ஆகிய மூன்றும் முக்கிய பங்கை ஆற்றுகின்றன.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு ஏற்கெனவே மனஅழுத்தம் இருந்தால் அவரது குழந்தைகளுக்கும் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத்தான் பாரம்பரிய காரணி என்று சொல்கிறோம். முழுமையாக ஒத்திருக்கும் இரட்டைக் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதுக்கான வாய்ப்பு அதிகமுள்ளது.

அதிக எதிர்பார்ப்புகள், இறுக்கமான மனோபாவம், மற்றவர்களிடம் தொடர்ந்து குறை காண்பது போன்றவைகளாலும் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. இதை உளவியல் காரணி என்கிறோம். நிதி இழப்பு, வேண்டப்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பிரச்சினைகள் அல்லது மரணம், குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு அல்லது தொடர்ச்சியான சச்சரவுகள், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகமால் இருப்பது போன்றவை மன அழுத்தம் உண்டாக்கவல்ல சமூகக் காரணிகள்.

பசி உணர்விலோ அல்லது எடையிலோ மாற்றம், ஆற்றல் இழப்பு, களைப்பு, வழக்கமான நடவடிக்கைகளில் ஆர்வம் இழப்பு, ஒருமுகச் சிந்தனை அற்றிருத்தல், முடிவெடுக்க முடியாமல் திணறுவது, தூக்க முறைகளில் மாற்றம், கலக்கம் அல்லது சுணக்கம், தங்களையே குற்றம் காண்பது, தேவையற்ற குற்றவுணர்வு, அடிக்கடி மரணத்தையோ அல்லது தற்கொலையையோ நினைத்துப் பார்த்தல்… இவை மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்.

குழந்தைகளைப் பொறுத்த வரைக்கும் பள்ளிக்குச் செல்ல மறுத்தல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தேர்வுகளில் மதிப்பெண் குறைதல் ஆகியனவும் மன அழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஐந்து அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஒருவரிடம் காணப்பட்டால், அவர் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது.

மேலும் நம்பிக்கையற்று இருப்பவர்கள், போதைப் பொருள் உட்கொள்பவர்கள், நடத்தைக் கோளாறு உடையவர்கள், ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்றவர்கள், உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாகவோ தொல்லைக்கு உள்ளானவர்கள், சட்ட ஒழுக்கச் சிக்கலில் இருப்பவர்கள், வீட்டிலிருந்து ஒடிப்போனவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களின் நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள், மரணம் அல்லது தற்கொலை பற்றி அதிகம் பேசுபவர்கள், தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் நடத்தைக் கொண்டவர்கள் போன்ற அறிகுறிகளைக் கொண்ட விடலைப் பருவத்தினரும் தொழில் ரீதியான மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

அப்போதுதான் தற்கொலை எண்ணம் கொண்ட காலகட்டம் கடந்துசெல்லும் வரை அவர்களை நேரடிக் கவனத்தில் வைத்திருக்க முடியும்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல சமயங்களில் ஆதரவற்ற நிலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால், ஒன்றையும் என்னால் செய்யமுடியவில்லை என்ற உணர்வில் மாட்டிக்கொள்கிறார்கள். இப்படியான உணர்வுகளில் மாட்டிக்கொள்ள அவர்களை விடக்கூடாது. சிறிய, அடையக்கூடிய இலக்குகளை வரையறுத்துக் கொள்வதே சுலபமாக அதிலிருந்து அவர்கள் வெளியே வர வழிவகுக்கும். அதில் அவர்கள் சாதிப்பது, சுயமரியாதையை உயர்த்தும்.

தற்கொலைகள் தொடரக்கூடாது. தொடர நாம் அனுமதிக்கவும் கூடாது.

prabhu thilak

Amrutha

Related post