அச்சுறுத்தும் தண்ணீர் நெருக்கடி! – பிரபு திலக்

 அச்சுறுத்தும் தண்ணீர் நெருக்கடி! – பிரபு திலக்

க்கிய நாடுகள் சபை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம், காலநிலை மாற்றம், அதிதீவிர வளர்ச்சியினால் தண்ணீர் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகப்படியான நுகர்வு மற்றும் மாசுபாட்டின் காரணமாக நீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதே சமயம் காலநிலை மாற்றங்களும் புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கி வருகின்றன. ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் நெருக்கடியில் வாழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் பொதுச் செயலார் அண்டோனியா குத்தரெஸ் கூறும்போது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர், மாசினாலும் காலநிலை மாற்றத்தினாலும் தூர்ந்துபோய் வருகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பருவநிலை தாறுமாறாகச் சீர்குலைந்து கிடப்பதன் காரணமாக, ஒரு பக்கம் வறட்சியின் கோரப்பிடி, இன்னொரு பக்கம் வரலாறு காணாத மழை என திகைத்துத் தடுமாறுகின்றன நாடுகள். தமிழ்நாட்டில், கடந்த 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிக அளவு வெப்பநிலை காணப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1901க்குப் பிறகு 2006 பிப்ரவரியில் 29.31°C, 2016 பிப்ரவரியில் 29.48°C பதிவானதே இதற்குமுன் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக இருந்திருக்கிறது. இந்த பிப்ரவரி மாதம் பதிவான வெப்பநிலை 29.54 டிகிரி செல்சியஸாக உள்ளது. இதுவே இதுவரை இருந்த பிப்ரவரி வெப்பநிலையில் அதிகபட்சமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. காரணம், பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவது வெயில், மழை அளவுகளை தாறுமாறாக மாற்றமடையச் செய்வதுடன் மோசமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

பூமி வெப்பமடைவதை மனிதனுக்குக் காய்ச்சல் வருவதோடு ஒப்பிடலாம். மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். இதற்கு மேலே சென்றால் காய்ச்சல் என்கிறோம். அதுவே 101, 102, 103 என்று உயரும்போது கடுமையான காய்ச்சல் ஆகிறது. உடலின் அதிக வெப்பநிலை மனிதனின் சராசரி இயக்கத்தைத் தடுக்கும். உடல்வலி கடுமையாகும். கட்டுப்படுத்த முடியாத காய்ச்சல் மரணத்தை வரவழைக்கலாம். இதேபோன்றுதான் பூமியும்.

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ். பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் கூடுதலாகவும், துருவப் பகுதிகளில் குறைவாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 15 டிகிரி செல்சியஸ் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனைவிட வெப்பநிலை அதிகரிக்கும்போது பூமியின் நிலை மோசமாகும். ஆனால், 15 டிகிரி செல்சியஸை நாம் கடந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. அது மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதன் விளைவுகள்தான் தற்போதைய தாறுமாறான பருவநிலை மாற்றங்கள்.

பூமியின் வெப்பநிலை இப்படி அதிகரித்திருப்பதற்குக் காற்று வெளியில் நாம் ஏற்படுத்திருக்கும் மாசுக்கள்தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமியை வட்டமாகக் கண்ணுக்குத் தெரியாத ஒரு போர்வை போலக் காற்றுவெளி மண்டலம் சுற்றியிருக்கிறது. இதனை விஞ்ஞானிகள் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்கிறார்கள். பூமியின் வெப்ப அளவு அதிகரிப்பதால் மட்டுமல்ல குறைந்தாலும் பிரச்சினைதான். பூமியைச் சுற்றியிருக்கும் கோள்களில் மைனஸ் 14 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளது. இந்தக் குளிரில் இருந்தால் நம் நிலை என்னவாகும்? கருகி கருவாடு ஆகிவிடுவோம். மற்ற கோள்களில் உள்ளது போல் மைனஸ் டிகிரியில் குளிர் செல்லாமல், பூமியின் வெப்ப அளவை சமச்சீராக வைத்திருப்பதில், கிரீன் கவுஸ் வாயுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பூமி, தன் மீது விழும் சூரிய வெப்பத்தை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பும். இது கிரீன் ஹவுஸ் வாயு மண்டலம் வழியாக விண்வெளிக்குக் கடத்தப்படும். இப்படிக் கடத்தப்பட்டு விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. இது நடந்தால் சாயங்காலம் ஆனதும் வெப்பக் காற்று குறைந்துவிடும். இரவு 9 – 10 மணி ஆகும்போது குளிரத் தொடங்கிவிடும். ஆனால், இன்று நிலமை தலைகீழாகிவிட்டது.

கார்பன் டை ஆக்சைட், நைட்ரஸ் ஆக்சைட், மீத்தேன், குளோரா புளோரா கார்பன் ஆகிய வாயுக்கள்தான் கிரீன் ஹவுஸ் வாயுக்கள். இவ்வாயுக்கள் காற்று வளி மண்டலத்தில் அதிகரித்ததன் காரணமாக, பூமியில் இருந்து திரும்ப அனுப்பப்படும் வெப்பத்தை உள்வாங்கி, தேக்கி வைக்கிறது. இதனால், வாயுமண்டலம் வெப்பமாகிறது. இதன் விளைவாக, பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது.

15 டிகிரி செல்சியஸ் என்ற சராசரி வெப்ப நிலையைவிட இன்று 27 சதவிகிதம் அதிகமாகிவிட்டது. நடு இரவு ஆகியும் வெப்பச் சலனம் உள்ளதற்கு இதுதான் காரணம். அதிகரித்துள்ள வெப்பத்தை ஏசி போன்ற கண்டுபிடிப்புகள் மூலம் மனிதன் சமாளிக்கிறான். விலங்குகள், தாவரங்கள் உட்பட்ட மற்ற உயிரினங்கள் என்ன செய்யும்? காட்டில் யானைகள் ஈர மண்ணை வாரி தன் மீதே கொட்டுகிறது. ஆனால், இப்படி யானைகளால் எத்தனை வருடங்கள் சமாளிக்க முடியும்? இப்போதே பல உயிரினங்களும் தாவரங்களும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் அழிந்துவிட்டன. பல அழிந்து வருகின்றன.

பூமியின் வெப்பநிலை அதிகமாவதற்குப் பெருமளவு காரணம் நாம் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள், நிலக்கரி உட்பட்ட எரிசக்தியும் காடுகள் அழிக்கப்படுவதும்தான் என்பது விஞ்ஞானிகள் முடிவு. நிலக்கரி, பெட்ரோல் எரிபொருள்கள் எரிக்கப்படும் போது கரியமில வாயு வெளியாகிறது. காடுகளை அழிக்கும் போது மித்தேன் வாயுக்கள் வெளியாகிறது. நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை அதிகளவில் பயன்படுத்தும் போது நைட்ரைட் ஆக்சைட் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகிறது. இப்படி இயற்கைக்கு மாறாக அதிக அளவு உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், குளோரா புளோரா கார்பன் போன்ற வெப்ப வாயுக்கள் காற்று வளி மண்டலத்தில் அதிகமாகி பூமி திருப்பி அனுப்பும் வெப்பத்தைத் தடுக்கின்றன.

எனவே, இந்த நான்கு வாயுகளை எவ்வாறு கட்டுப்படுத்தப்படுத்துவது என்பதுதான் இன்று நம் முன் உள்ள சவால். இன்றைய நிலையில் உலகின் ஒட்டு மொத்த எரிசக்தித் தேவை நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் எரிவாயுக்களின் மூலமே நிவர்த்திச் செய்யப்படுகிறது. இந்த மூன்றின் பயன்பாடும் இல்லாத உலகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பதுதான் நிஜம். ஆனாலும், இவற்றை இப்பொழுது பயன்படுத்துவது போலத் தொடர்ந்தும் நாம் பயன்படுத்தினால் உலகின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதும் நிதர்சனம்.

பூமி சூடாவதன் பாதிப்புக்கள் முதலில் கடலில் தெரிந்தது. பூமியின் தென் துருவத்திலுள்ள அண்டார்டிகா கண்டத்தின் பனிப் படலம் மொத்தத்தையும் மதிப்பீடு செய்துள்ள ஆய்வு ஒன்று, பூமி வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக, தற்போது ஒவ்வொரு ஆண்டும் 160 பில்லியன் டன்கள் எடையளவுக்கு இக்கண்டம் பனிக்கட்டியை இழந்துவருகிறது என்று தெரிவித்துள்ளது. ஒரு சில நூற்றாண்டுகளில் அங்குள்ள பனி மொத்தமும் உருகலாம் எனவும் அஞ்சப்படுகிறது. “அது நிகழ்ந்தால் உலகத்தில் கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும்’’ என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா தெரிவித்திருந்தது. இதனால், சிறு தீவுகளும் கடற்கரையை ஒட்டிய நகரங்களும் நீரில் மூழ்கும். வெப்பமடையும் போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது. அதனாலும் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும். கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரிக்கும்.

‘பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் 2030ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்கு அரிசி உற்பத்தி குறையும்; அடுத்த 20 ஆண்டுகளில் 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை இழக்க நேரிடும். இந்த நூற்றாண்டின் இறுதியில் 48 சதவீதம் உணவு தானிய உற்பத்தி குறையும். கடல் நீர் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் கடல் பகுதியில் இருந்த மீன்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. எனவே, மீன்கள் கிடைப்பதும் தடைபடும். இன்றைய சூழலில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர்ந்தால், 50 லட்சம் டன் கோதுமை உற்பத்தியை இழக்க நேரிடும்’ என்கின்றன புள்ளிவிபரங்கள்.

ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன் எரிகற்கள் விழுந்ததில் பூமியின் 96 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்தன. இன்று நாம் சினிமாவில் மட்டும் பார்க்கும் டைனோசர்கள் அழிந்தது அப்போதுதான். அதற்கடுத்து அதுபோன்ற ஒரு பெரும் அழிவுக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது பூமியில் வெப்பநிலை அதிகரிப்பது. டைனோசர் கதை விரைவில் யானைக்கு நிகழலாம் என்கிறார்கள்.

எனவே, இதற்கு மாற்று வழிகளை நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இப்போது உடனடியாக எரிசக்தி சிக்கனம், ஜீரோ கார்பன் எனர்ஜி, கார்பனை உட்கொள்ளுதல், குப்பைகள் மேலான்மை ஆகிய நான்கு வழிகளையும் நாம் செய்தே ஆகவேண்டும்.

உலகம் முழுக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பருவநிலை மாற்ற விஷயத்தில் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், “நாடுகள் பங்களிப்புடன் தனி மனிதர்களின் பங்களிப்பும் முக்கியமானது’’ என்கிறது ஐ.நா. சபை. தனிமனிதர்களான நம்மால் என்ன பங்களிப்புச் செய்ய முடியும்?

சின்ன சின்ன விஷயங்கள்தான்…

சிக்னலில் நிற்கும் போது வாகன என்ஜினை ஆஃப் செய்து வைப்பதன் மூலம் பெட்ரோலியப் பொருட்கள் எரிப்பதை குறைக்கலாம். வீட்டில், அலுவலகத்தில் தேவையில்லாமல் எரியும் லைட்களை ஆஃப் செய்வது, குறைவான வோல்டேஜ் LED லைட்களைப் பயன்படுத்துவது போன்றவை மூலம் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம். தேவைப்படாத நேரங்களில் மின்சாதனங்களை அணைத்துவிட வேண்டும். இதனால், மின்சாரத் தயாரிப்புக்காக நிலக்கரி எரிக்கப்படுவது குறையும்.

நம்மால் முடிந்தளவு மரங்கள் நடலாம். ஒரு மரம் 4 கிலோ கார்பன் டை ஆக்சைடை உட்கொள்ளும். 4 கிலோதானே என நினைக்காதீர்கள். 4 கிலோ கார்பன் டை ஆக்சைட் என்பது உங்கள் பெட்ரூமில் பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.

மக்கும் குப்பை, மக்காத குப்பை எனக் குப்பையைப் பிரித்து மேலாண்மை செய்வதன் மூலம் மீத்தேன் வாயுக்கள் உற்பத்தியாவை தடுக்கலாம். காகித பயன்பாட்டைக் குறையுங்கள். இன்று பல விஷங்களுக்கு பிரிண்ட் அவுட் அவசியமில்லை. அவசியமானாலும், தாளின் இரண்டு பக்கமும் பயன்படுத்துங்கள்.

காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம், பயோ டீசல் போன்றவை பயன்பாட்டின் மூலம் ஜீரோ கார்பன் எனர்ஜிக்குப் பங்காற்றலாம். அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும்போது சைக்கிளிலோ நடந்தோ செல்லலாம்.

முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்க்கலாம். கடைகளுக்குச் செல்லும் போது ஒரு பையுடன் செல்லுங்கள். பாலிதின் பொருட்கள் எரிக்கப்படும் போது உருவாகும் கார்பன் டை ஆக்சைட்தான் பூமியின் வெப்பநிலையை அதிகரிப்பதில் முதலிடம் பிடிக்கிறது.

Prabhu Thilak

Amrutha

Related post